திராவிட மறுமலர்ச்சி ஏற்பட்டு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கு முன்னால், 'இதற்கிணையாகக் கூறக்கூடிய பொது அறநூல் பிறிதேதுமில்லை' என்று இன்றும் சிறப்பித்துக் கூறப்படும் திருக்குறள், தான் பெற்றிருக்க வேண்டிய செல்வாக்கைப் பெற முடியாமல் ஒதுக்கப்பட்டே கிடந்தது. இதற்குப் பல காரணங்களுண்டு. அவற்றில் ஒன்று அது பொதுவாக மக்களாலும் சிறப்பாகத் தமிழர்களாலும் பின்பற்றப்படும் நூலாக ஆகாமைதான். அதுபற்றிப் பேசுவதும் எழுதுவதும் தவிர அதை வாழ்க்கை நெறியாகக்கொண்டு வாழ்வோர் இன்றும் எத்தனை பேர்? அவ்வாறு திருக்குறளை வழிகாட்டியாகக் கொள்ளாமைக்கும் சில காரணங்களுண்டு. அவற்றுள் ஒன்று ஒவ்வொரு குறளும் சுட்டிக்காட்டும் நெறியைத் தெளிவாகச் சுட்டி வரையறுத்து அது இதுதான் என இன்றைய தமிழனுக்குப் புரியும் வண்ணமும் புரிந்து உளங்கொள்ளும் வண்ணமும் அமைந்த உரையின்மையே. அக்குறையைப் போக்கவும் எழுந்ததே கலைஞர் உரை. கலைஞர், வள்ளுவர் கோட்டம் அமைத்ததும், குறளோவியம் தீட்டியதும்போல் இக்குறள் உரை வகுத்ததும் குறள் நெறி பரப்பும் பணியில் குறிப்பிடத்தக்க விழுமியப் பணியாக அமைந்துள்ளது. பரிமேலழகர் முதலிய பழைய உரைகாரர்களும் திரு.வி.க., புரட்சிக் கவிஞர், மு.வ. போன்ற புத்துரைகாரர்களுமாகிய உரையாசிரியர்கள் பற்பலருள் கலைஞர் தம் பணியால் தனித்துச் சிறக்கிறார்.
-புலவர் மா.நன்னன்
Be the first to rate this book.