நரசய்யா 1950களில் கப்பற்படையில் பொறியாளராகச் சேர்கிறார். அதற்கான நேர்காணல் நடக்கிறபோது, “கப்பலைப் பற்றி என்ன தெரியும்?” என்று அவரிடம் ஆங்கில அதிகாரிகள் கேட்கிறார்கள். “கப்பலைப் படத்தில் பார்த்திருக்கிறேன்” என்கிறார். திரையில் பார்த்ததுதான் இவருக்கும் கப்பலுக்குமான முதல் அறிமுகம். போர்க்கப்பல் என்பதால் அதற்கான பயிற்சிக் கூடத்தில் சேர்வதில் இருந்து நமக்கான வாசிப்பு தொடங்குகிறது. அந்தப் பயிற்சிக் கூடத்தில் கடைபிடிக்கப்படுகிற ஒழுக்கம், ஊரைத் தேடுவது, எனத் தொடங்குகிறார். முதன்முதலாக பெரிய கப்பலைப் பார்க்கும்போது கொண்ட பிரமிப்பு, கடல் கொந்தளிப்பில் ஏற்படுகிற மன, உடல் கொந்தளிப்புகள் என ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே போகிறார்.
என்னை மிகவும் ஈர்த்தது பயிற்சிக்காக வைக்கப்படுகிற சோதனைகளை அவர் விவரித்தப் பகுதி. இரண்டு கப்பல்கள் இடையே கயிறுகளைக் கட்டி, ஒரு கப்பலில் இருந்து மற்றொன்றுக்கு பொருட்களை எடுத்து வருவது. கீழே ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்க்கவே கூடாது என்பதுதான் அந்தப் பயிற்சியில் முதலில் கற்றுத் தருவது. தேவைப்படும் நேரத்தில் அடுத்த கப்பலில் இருந்து எண்ணெயைக் கூட இப்படி கயிறில் தொங்கியபடி எடுத்து வருவார்களாம். இரவில் கப்பல்களில் இருந்து கயிற்று ஏணியை வெளியே தொங்கவிட, மற்றொரு கப்பலில் இருப்பவர்கள் அதைத் திருடிக் கொண்டு வரவேண்டும். இதில் எந்தக் கப்பலில் உள்ளவர்கள் வெற்றிபெறுகிறார்கள் என்பது பந்தயம். இவையெல்லாம் நடுக்கடலில் நடப்பவை. மாலுமிகள் விழிப்பாக இருக்கிறார்களா என்பதற்கான பயிற்சி இது. இப்படி ஒவ்வொன்றுமே ஆச்சரியம் தரக்கூடியவை.
இந்தியச் சுதந்திரத்துக்குப் பிறகு இவர் இந்தத் துறையில் சேர்ந்ததால், நமது நாடு எப்படி இதில் அடுத்தடுத்த இடத்துக்குத் தன்னை மேம்படுத்திக் கொண்டது என்பதையுமே எழுதுகிறார். இந்தியாவில் கோவாவில் பயணம் தொடங்கி வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்றிருக்கிறார். நாற்பது நாட்கள் கடலிலேயே இருந்துவிட்டுத் தரையில் இறங்கும்போது கொண்டிருக்கிற மனநிலை, தரையிறங்கியதும் வீட்டில் இருந்து அனுப்பபட்ட கடிதங்களை மொத்தமாகப் பெற்று வாசிப்பது, ஒவ்வொரு நாட்டின் பழக்கவழக்கங்கள் என அருமையான டைரிக்குறிப்புகள்.
கடலையும், கடலோடிகளின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லி சில வார்த்தைகளைச் சொல்கிறார். அந்த வகையில் அருமையான சுயமுன்னேற்ற புத்தகமாகவும் கருதலாம்.
கப்பல்களைப் பற்றி எழுதும்போது புரியாமல் போய்விடுமோ என்பதாலயே யாரும் எழுதுவதில்லை என்று சொல்லும் நரசய்யா, எதுவொன்றையும் விளக்க எளிய மொழியையே கைகொள்கிறார். அதனாலேயே படிக்க சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. கடல் ஒரு மனிதனுக்குள் என்னவாகப் பதிவாகியிருக்கிறது என்பதாகவே இதனை புரிந்து கொண்டேன்.
- எழுத்தாளர் ஜா.தீபா
Be the first to rate this book.